ஜோலார்பேட்டை அருகே ரயிலில் அடிபட்ட பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
பேர்ணாம்பட்டை அடுத்த சின்னதாமல் செரு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஜெயந்தி (35). இந்நிலையில் ஜோலார்பேட்டை அருகே புத்துக்கோயில் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஜெயந்தி சனிக்கிழமை வந்துள்ளார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரயிலில் சிக்கி ஜெயந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த 7-ஆம் தேதி, ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பம் பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்ட ரயில்வே போலீஸார், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இந்த விபத்துகள் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.