வாணியம்பாடியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாணியம்பாடி சி.எல். சாலை வாரச்சந்தை மைதானம் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு, மதுபோதையில் சிலர், அப்பகுதி பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகத்தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் 200}க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர்.
அப்போது, ரகளையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரியும், மதுபானக் கடையை உடனடியாக மூடக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி டி.எஸ்.பி சுந்தரம், நகர போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.