வேலூர் மாவட்டத்தில் அங்கீகாரமில்லாத வீட்டு
மனைகளைப் பதிவு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்த வழிகாட்டி விவரங்களை தெரிவித்துள்ளதால் பத்திரப் பதிவு செய்யும் நடவடிக்கை திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகுவதைத் தடுப்பதோடு, அங்கீகாரமில்லாத நிலங்கள் பதிவு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்பு வரை பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள அங்கீகாரமில்லாத மனைகளை மறு பதிவு செய்து கொள்ளலாமெனவும், அதன்பிறகு மனைகளாக்கப்பட்டவை உரிய வரன்முறைக்குப் பிறகு தான் பதிவு செய்ய முடியும் என உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக மறு பதிவு செய்ய முடியாமல் இருந்த அங்கீகாரமில்லாத மனைகள் கடந்த 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்குள் பதிவு செய்திருந்தால் மறு பதிவு செய்யத் தடையில்லை என பத்திரப் பதிவுத் துறை அறிவித்திருப்பதை மக்கள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்யத் தடையில்லை. அதேவேளையில், மனைகளாகப் பிரிக்கப்பட்டு பதிவு செய்யப்படாமல் உள்ள மனைகள் சென்னையாக இருப்பின் அங்குள்ள பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடமும், மற்ற மாவட்டங்களில் உள்ளூர் திட்டக் குழுமத்திடமும் அனுமதி பெற்றப் பிறகே பதிவு செய்ய முடியும். ஊராட்சிகளில் அனுமதி பெற்றால் பதிவு செய்ய முடியாது என்றார்.