ஆம்பூரில் பாஜக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆம்பூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (30). இவர் நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும், பாஜக ஆம்பூர் நகர இளைஞரணி தலைவராக உள்ளார்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை சங்கர் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். வீட்டிலிருந்து சிறிதுதூரம் சென்றபோது, அவரை மர்ம நபர்கள் 3 பேர் வழிமறித்து, அரிவாளால் வெட்டினர். இதில், பலத்த காயமடைந்த அவர், மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இந்நிலையில், அங்கிருந்தவர்கள் சங்கரை மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் நகர போலீஸார், வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன், எஸ்.பி. பகலவன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக 2 பேரை பிடித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.