ஆம்பூர் அரசு மருத்துவமனையில் டாயலிசிஸ் பிரிவு தொடக்கம், அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் எம்எல்ஏ ஆர். பாலசுப்பிரமணி தலைமை வகித்து, அம்மா ஆரோக்கிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் கலிவரதன் வரவேற்றார். ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று டயாலிசிஸ் பிரிவை தொடங்கி வைத்தும், பேரவை உறுப்பினர் நிதியில் ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தைத் திறந்து வைத்தும் பேசினார்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஷர்மிளாதேவி, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் எம். மதியழகன், ஷபீக் ஷமீல் சமூக சேவை சங்கத் தலைவர் பிர்தோஸ் கே. அஹமத், சுரா லெதர்ஸ் பொது மேலாளர் ஏ.பி. மனோகர், மருத்துவர் கென்னடி, ஆம்பூர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் குணசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான இடத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம், ஜூன் 27: குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவு (டயாலிசிஸ்) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மருத்துவம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் ஏ. கலிவரதன் தலைமை வகித்தார். மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.அமுதாமணி வரவேற்றார். எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் குத்து விளக்கேற்றினார்.
மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சிறுநீரக சுத்திகரிப்புப் பிரிவை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில், தேசிய நலக் குழுமத் திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பில் இந்த இயந்திரம் வழங்கப்பட்டது. சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவில் தண்ணீரை சுத்திகரிக்க எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்தில் இயந்திரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு தேசிய நலக் குழும அலுவலர் மருத்துவர் ஏ.கென்னடி, வட்டாட்சியர் இ. நாகம்மாள், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பி. சங்கர், கே.எம்.ஜி. கல்லூரிச் செயலர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், அரசு வழக்குரைஞர் கே.எம். பூபதி, அதிமுக நிர்வாகிகள் ஆர்.மூர்த்தி, இ. நித்யானந்தம், எஸ். சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.