அனைவருக்கும் உயர்கல்வி திட்டத்தில் 911 மாணவர்களுக்கு ரூ. 58 லட்சம் கல்வி உதவித் தொகை அளிப்பு

அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 911 பேருக்கு ரூ.58 லட்சம் கல்வி உதவித் தொகைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 911 பேருக்கு ரூ.58 லட்சம் கல்வி உதவித் தொகைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல், அறக்கட்டளை புரவலராக பதிவு செய்தல் நிகழ்ச்சி காட்பாடியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அறக்கட்டளை தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட அறக்கட்டளை மூலம் 2,890 பேர் ரூ. 3.16 கோடி கல்வி உதவித் தொகை பெற்று உயர்கல்வி பயில்கின்றனர். இவர்களில் 78 சதவீதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகளாவர். நாட்டில் 700 பல்கலைக்கழகங்கள், 40,000 கல்லூரிகள் இருந்தும் அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதில்லை. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றார்.
பாரத ஸ்டேட் வங்கி சென்னை மண்டல துணைப் பொது மேலாளர் ஏ.புவனேஸ்வரி பேசியதாவது:
படிக்க தகுதியிருந்தும், பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக அந்த வாய்ப்பு பெற முடியாதவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கித் தரும் பணியை இந்த அறக்கட்டளை செய்து வருவது பாராட்டுக்குரியது. பாரத ஸ்டேட் வங்கி சமுதாய நலனுக்கான பணிகளை செய்து வருவதால், இந்த அறக்கட்டளைக்கு தேவையான உதவி வங்கி மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சென்னை அபிராமி மெகா மால் தலைவர் அபிராமி ராமநாதன், அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் புரவலராக சேரும் திட்டத்தை தொடங்கி வைத்து, அறக்கட்டளை மூலம் 911 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை ரூ. 58 லட்சத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசியது:
உணவு, உடை, இருப்பிடத்துடன் கல்வி வழங்க இந்த அறக்கட்டளை நடவடிக்கை எடுத்து வருகிறது. வேகம், விவேகம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றார்.
அறக்கட்டளை நிர்வாகி ஜெயகரன் ஐசக், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் லிங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர். 40-க்கும் அதிகமானோர் ரூ. 5 ஆயிரத்துக்கும் மேல் நிதி வழங்கி அறக்கட்டளை புரவலர்களாகப் பதிவு செய்தனர்.
அறக்கட்டளை உறுப்பினர் மயிலாம்பிகை குமரகுரு வரவேற்றார். அறக்கட்டளை பணிகள் குறித்து பொருளாளர் கே.ஜவரிலால் ஜெயின், புலவர் வே.பதுமனார், நிதிக்குழு தலைவர் வெங்கடசுப்பு ஆகியோர் விளக்கினர். அறக்கட்டளை திட்ட அலுவலர் முத்துவீரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com