ஜோலார்பேட்டை அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமெனவும் கூறி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சனிக்கிழமை சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த பால்நாங்குப்பம் பகுதி சின்ன கவுண்டர் வட்டத்தைச் சேர்ந்த ராஜாவின் மகன் விஷ்ணு (20). இவர், ராணுவ பணிக்குச் செல்வதற்காக ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் பயிற்சிப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விஷ்ணு தனது உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது விஷ்ணுவை சதீஷ் என்பவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டுக்குச் சென்ற விஷ்ணு, மீண்டும் வெளியில் சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில், சனிக்கிழமை காலை லாரி ஷெட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் விஷ்ணுவின் சடலம் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸார், விஷ்ணுவின் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், விஷ்ணு கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்து அங்கு வந்த டிஎஸ்பி எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து விஷ்ணுவின் தந்தை ராஜா அளித்த புகாரின்பேரில், 6 பேர் மீது ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.