சோளிங்கரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ. 81 லட்சம் மதிப்பிலான நகைகளை மோசடி செய்ததாக நிறுவனத்தின் மேலாளர் உள்ளிட்ட 3 பேரை சோளிங்கர் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சோளிங்கரில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பொதுமக்கள் தங்களின் நகைகளை அடகு வைத்திருந்தனர். அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் சரியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு திருப்பியளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அதன்பேரில், இந் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்படி, நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த 3,008 கிராம் நகைகளை காணவில்லை எனத் தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 81 லட்சத்து 52 ஆயிரத்து 748 ஆகும்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி கோபாலகிருஷ்ணன் சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை, நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த அலுவலர்கள், சில வாடிக்கையாளர்கள் மூலமாக விற்பனை செய்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில், சோளிங்கர் காவல் ஆய்வாளர் காண்டீபன், உதவி ஆய்வாளர்கள் பாஸ்கரன், கருணாநிதி ஆகியோர் வழக்குப் பதிந்து, மேலாளர் சிவலிங்கம் (31), துணை மேலாளர் சரண்யா (21), வாடிக்கையாளர் அன்பு (50) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பாபுவை தேடி
வருகின்றனர்.