பொதுமக்களே திறந்து வைத்த பள்ளிக் கட்டடம்

மாதனூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியின் புதியக் கட்டடத்தை பொதுமக்களே வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர்.

மாதனூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியின் புதியக் கட்டடத்தை பொதுமக்களே வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர்.
வேலூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், பள்ளிகுப்பம் கிராமத்தில் தொடங்கப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் இல்லாததால் தொடக்கப் பள்ளி வளாகத்திலேயே செயல்பட்டு வந்தது. புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ. 1.61 கோடி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.
இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் அந்த இடம் தனக்குச் சொந்தமானது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை 8 வாரத்தில் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் வழிகாட்டி உத்தரவிட்டு இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது.
தொடக்கப் பள்ளி வளாகத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பறைகள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த பழுதடைந்துள்ள கட்டடத்துக்கு தங்களது பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் புதிய பள்ளிக் கட்டடத்தை தாங்களே திறந்து வைத்து மாணவர்களை வகுப்பறைகளில் அமரவைத்தனர். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கல்வித் துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி அரசு உயர்நிலைப் பள்ளியின் புதிய கட்டடத்தில் வகுப்புகள் நடத்த கல்வித் துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com