தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு முடித்து மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 44.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 246 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி பேசியதாவது:
கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான 14 வகையான நலத் திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. சில மாநிலங்களில் மடிக்கணினி வழங்குவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் அதைச் செயல்படுத்த முடியவில்லை.
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு முடித்து மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 44.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் கணினி துறையில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்.
பள்ளி இடைநிறுத்தலை தவிர்க்க 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வைப்பு நிதியாகச் செலுத்தப்பட்டு, மேற்படிப்புக்கு வட்டியுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கல்லுரிப் படிப்பை முடித்தப் பிறகு திருமண உதவித் தொகையாக ரூ. 50 ஆயிரமும், தாலிக்கு தங்கமும் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். திருப்பத்தூர் மாவட்டக் கல்விஅலுவலர் சாம்பசிவம் முன்னிலை வகித்தார். ஜோலார்பேட்டை நகர அதிமுக செயலாளர் எஸ்.பி.சீனிவாசன், பெற்றோர்-ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் கே.ஜி.சரவணன், திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், ஜோலார்பேட்டை முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆதம், ஸ்ரீராம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் கே.சி.அழகிரி, திருப்பத்தூர் சர்க்கரை ஆலைத் தலைவர் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதுகலை ஆசிரியர் பி.மாது நன்றி கூறினார்.
இதேபோல ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 107 பேருக்கும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 83 பேருக்கும் வக்கணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 114 பேருக்கும் மடிக் கணினிகள் வழங்கப்பட்டன.