லத்தேரி அருகே தனியாக வசித்து வந்த தம்பதியை அடித்துக் கொலை செய்து தங்க நகை, பணத்தை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை கொள்ளை அடித்துச் சென்றனர்.
வேலூர் மாவட்டம், லத்தேரி அருகே விக்கிரமாசிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் முருகேசன் (67). இவரது மனைவி பொன்னியம்மாள் (60). இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளியூரில் இருப்பதால் தம்பதி இருவரும் தென்னந்தோப்பில் வீடு கட்டி வசித்து வந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நீண்டநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததை அடுத்து அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த லத்தேரி போலீஸார் அங்கு சென்று சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு தங்க நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றி மதிப்பு குறித்து உடனடியாக தெரியவில்லை.
வேலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி நின்றது. இதுகுறித்து லத்தேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.