நிலம் விற்பதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்தவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
காட்பாடி காந்தி நகரைச் சேர்ந்த செல்வம் (58), அவரது தந்தை பெயரில் இருந்த 58 சென்ட் நிலத்தை விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த சீனிவாசனுக்கு (46) ரூ. 40 லட்சத்துக்கு விற்பனை செய்வதாக கடந்த 2012-ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டாராம். முதல் தவணையாக ரூ. 20 லட்சத்தைப் பெற்றுக் கொண்ட செல்வம், அதற்கான ரசீது, நிலத்துக்கான பவர் பத்திரத்தை சீனிவாசனிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு நிலத்தை கிரையம் செய்ய வேண்டுமென சீனிவாசன் கூறியதற்கு, நிலத்தை விற்க விரும்பவில்லை என்றும், ரூ. 20 லட்சத்தைத் திருப்பித் தருவதாகவும் செல்வம் கூறி ஏமாற்றினாராம்.
இதுகுறித்து விருதம்பட்டு காவல் நிலையத்தில் சீனிவாசன் அளித்த புகாரையடுத்து, தலைமறைவாக இருந்த செல்வத்தை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.