ஜோலார்பேட்டை அருகே கோயிலில் அம்மன் சிலையில் இருந்த 2 பவுன் தாலி மற்றும் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த சின்னாகவுண்டனூரில் மலையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரி திங்கள்கிழமை மாலை பூஜைகளை முடித்து விட்டு கோயிலை பூட்டிச் சென்றார். செவ்வாய்க்கிழமை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து பூசாரிக்கு தகவல் அளித்தனர்.
கோயிலில் அம்மன் சிலையில் இருந்த 2 பவுன் தங்க தாலியையும், உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.