கே.வி. குப்பம் அருகே மணல் லாரிகள் ஊருக்குள் வருவதைத் தடை செய்யக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
லத்தேரியை அடுத்த திருமணி ஊராட்சி, பனஞ்சோலை அருகே பாலாற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. அந்தக் குவாரியில் இருந்து நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த லாரிகள் கலர்பாளையம், சேனூர் வழியாக வேலூருக்கும், திருமணி, அன்னங்குடி, லத்தேரி வழியாக குடியாத்தத்துக்கும் செல்கின்றன.
லத்தேரி, சேனூர், திருமணி ஆகிய பகுதிகளில் அரசு, தனியார் பள்ளிகள், பிரசித்தி பெற்ற கோயில்கள் பல உள்ளன. மணல் லாரிகள் வேகமாக செல்வதால் மாணவர்களும், பொதுமக்களும் சாலையில் செல்ல பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இதனால், மணல் லாரிகள் ஊருக்குள் வருவதைத் தடை செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை ஏராளமான பொதுமக்கள் திருமணி பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காட்பாடி வட்டாட்சியர் பாஸ்கர், டி.எஸ்.பி. அலெக்ஸ் மற்றும் லத்தேரி போலீஸார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மணல் லாரிகள் மாற்றுப் பாதையில் செல்ல உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.