நமது இந்திய பாரம்பரிய கலாசாரத்தில் பல தலைமுறைகளுக்கு அந்தஸ்து மற்றும் பொருளாதார பாதுகாப்பாக இருந்தது தாத்தா, பாட்டியின் முதலீடு மற்றும் சேமிப்பு முறைகளே. ஆனால் மேலை நாட்டு கலாசார மோகத்தால் ஈர்க்கப்பட்டுள்ள இன்றைய இளம் தலைமுறையினரின் முதலீடு மற்றும் சேமிப்பு வருமான வரியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் மட்டுமே உள்ளது என சோளிங்கர் பாரதி வேலு கல்லூரி முதல்வர் வி.சாந்தி கூறினார்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பொருளாதார துறையும், செபி எனப்படும் இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு அமைப்பும் இணைந்து உலக முதலீட்டாளர் வாரத்தையொட்டி நடத்திய இளம் தலைமுறை முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியர் பி.சென்னகிருஷ்ணன் வரவேற்றார். பொருளாதார துறை தலைவர் சி.தண்டபாணி, இணைப் பேராசிரியர் ஜி.யோகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்குக்கு பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.செந்தில்குமார் தலைமை வகித்துப் பேசினார்.
கருத்தரங்கில் சோளிங்கர் பாரதி வேலு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி முதல்வர் வி.சாந்தி பேசியதாவது:
போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் உழைத்து சம்பாதித்த பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடிக்கும் தனியார் சீட்டு கம்பெனிகள், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்து விடக்கூடாது என்ற நோக்கிலும், மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை அரசின் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே செபியின் நோக்கம் ஆகும். அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பயிலும் இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.