நாட்டறம்பள்ளி அருகே கடந்த ஓராண்டாக கிராம சேவை மையக் கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட சொரக்காயல்நத்தம் ஊராட்சியில் பெரிய ஏரிக்கரை அருகே கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையக் கட்டடம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், சமூக விரோதிகளின் மது அருந்தும் இடமாக மாறி உள்ளது. மேலும், சில நபர்கள் இக்கட்டடத்தில் அமர்ந்து மது அருந்தி, அப்பகுதி மக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். மேலும், சொரக்காயல்நத்தம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக நாட்டறம்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்துக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கிராம சேவை மையக் கட்டடப் பணியை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.