சோளிங்கர் அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் புதன்கிழமை கோயில் பூசாரி இறந்தார். இருவர் பலத்த காயமடைந்தனர்.
சோளிங்கரை அடுத்த வீரானத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து சங்கர் (57). இவர், அங்குள்ள கோயிலில் பூஜை செய்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை முத்து சங்கர் பைக்கில் வீரானத்தூரில் இருந்து அரக்கோணத்துக்கு சென்று கொண்டிருந்தார். சோளிங்கரை அடுத்த ஐயப்பேடு இணைப்பு சாலையில் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதினார்.
இதில், முத்து சங்கர் மற்றும் மற்றொரு பைக்கில் வந்த இச்சிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான பிரசாத், தினேஷ் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.
அருகே இருந்தவர்கள் மூவரையும் மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் முத்துசங்கர் இறந்தார். பிரசாத், தினேஷ் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து சோளிங்கர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.