மாதனூரில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிய 15 பேர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.
ஆம்பூர் அருகே அழிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சேகரின் வீட்டு நிச்சயதார்த்தம் வேலூரை அடுத்த பூட்டுதாக்கு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்காக உறவினர்கள் 20 பேர் வேனில் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மாதனூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது வந்தபோது திடீரென வேனின் டயர் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில், அழிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்த ராமு (33), சத்யா (38), மகேஸ்வரி (35), கிருஷ்ணன் (35), தரணி (31), பத்மா (60) உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்த ஆம்பூர் கிராமிய போலீஸார் அங்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், கிருஷ்ணன், பத்மா, அலமேலு, சரஸ்வதி, ரஞ்சிதம் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.