பொன்னை ஆற்றில் மேல்பாடிக்கும் - பள்ளேரிக்கும் இடையே மேலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதியைச் சேர்ந்த
விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்பாடி வட்டத்துக்கு உள்பட்ட மேல்பாடி, கீசகுப்பம், கோட்டநத்தம், வள்ளிமலை, எருக்கம்பட்டு, கொக்கேரி, கீரைசாத்து கோடியூர், வசூர், பள்ளேரி, கீழ்பள்ளேரி, சத்திரம்புதூர், அண்ணாநகர், கொண்டகுப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் ஆதாரமும், சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் வாழ்வாதாரத் தொழிலான விவசாயமும் பொன்னை ஆற்றை நம்பியே உள்ளது.
கடந்த 2015- ஆம் ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றுப்படுகையின் கீழ் உள்ள 129 ஏரிகள் நிரம்பி வெளியேறிய அதிகப்படியான மழை வெள்ளம் பாலாறு வழியாகச் சென்று, வீணாகக் கடலில் கலந்தது.
இந்நிலையில், பொன்னை ஆற்றின் குறுக்கே, வசூர் அருகே 1855-ஆம் ஆண்டு 216.50 மீ நீளம், 21.25 அடி உயரத்தில் தடுப்பணை கட்டப்பட்டு கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று பிரதான கால்வாய்கள் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாசன வசதி பெற்று வருகிறது. நீர்வரத்து அளவில் 40 சதவீதம் தண்ணீர் மட்டுமே பாசனத்துக்குச் செல்கிறது. மீதமுள்ள 60 சதவீத உபரி நீர் பாலாற்றில் கலந்து கடலில் சென்று வீணாகிறது. மேலும், பொன்னை ஆற்றில் அதிகப்படியான மணல் அள்ளியதால் சுமார் 15 அடி வரை ஆழம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிழக்கு, மேற்கு கால்வாய்களில் போதிய தண்ணீர் சென்றும் நீர்நிலைகள் நிரம்பவில்லை. இதனால் வறட்சி ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே மேல்பாடிக்கும் பள்ளேரிக்கும் இடையே பொன் னை ஆற்றில் தடுப்பணை கட்டினால் மட்டுமே இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும். எனவே தடுப்பணை கட்டித் தரவேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மேற்கண்ட பகுதி விவசாயிகள் நீர்த்தேக்கத் தடுப்பணை கட்டக் கோரும் மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர். எனினும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே தடுப்பணை கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.