நாட்டறம்பள்ளி அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த அரசு பள்ளிஆசிரியர் உயிரிழந்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி கரிராமன் வட்டத்தைச் சேர்ந்தவர் பார்த்தீபன் (30). இவர், திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத் துறை தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டின் எதிரே உள்ள பனை மரத்தில் பனங்காயை வெட்ட மரத்தில் ஏறியுள்ளார்.
அப்போது மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த பார்த்தீபனை, உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வாணியம்பாடி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், நள்ளிரவு உயிரிழந்தார்.
இதையடுத்து பார்த்தீபனின் சடலத்தை நாட்டறம்பள்ளி அருகே கரிராமன் வட்டத்தில் உள்ள வீட்டில் கொண்டு வந்து போலீஸாருக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து, பார்த்தீபனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பார்த்தீபனின் தந்தை கோவிந்தசாமி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.