பாலாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாலாஜாபேட்டையை அடுத்த நவ்லாக் ஊராட்சிக்கு உள்பட்ட புளியங்கண்ணு கிராம மக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். வாலாஜாபேட்டை வட்டம், நவ்லாக் ஊராட்சி மன்ற வளாகத்தில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்க வந்த நவ்லாக் ஊராட்சிக்கு உள்பட்ட புளியங்கண்ணு கிராம மக்கள் பாலாற்றில் மணல் குவாரி அமைத்தால், மேல்விஷராம், ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை ஆகிய நகராட்சிகள், வேலூர் மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் 600 ஏக்கர் பரப்பிலான அரசு விவசாய பண்னைகளின் பாசான நீராதாரம் பாதிக்கும் என தெரிவித்தனர். மேலும் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்று தீர்மானம் நிறைவேற்ற அதிகாரிகள் முன் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் மற்றும் அதிமுக கிளைச் செயலாளார் நாகேஷ், பொருளாளர் பழனி, திமுக நிர்வாகி பி.டி.ராஜேந்திரன் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கமலக்கண்ணன் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டனர். பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆம்பூரில்...
சோலூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் அருகே சோலூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்துக்கு அதிகாரிகள் எவரும் வராததால் கிராம மக்கள் கூட்டத்தைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்தால் தான் கூட்டத்தில் பங்கேற்போம் இல்லையெனில் புறக்கணிப்பு தொடரும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.