திருமலையில் வெள்ளிக்கிழமை காலை 4 போலி அபிஷேக சேவை டிக்கெட்டுகளை விஜிலென்ஸ் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமலையில் வெள்ளிக்கிழமைகளில் அபிஷேக சேவை நடைபெறுவது வழக்கம். இதற்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தர்கள் அபிஷேக சேவையில் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சென்னையைச் சேர்ந்த 4 பக்தர்கள் அபிஷேக டிக்கெட்டுகளுடன் தரிசன வரிசையில் நுழைந்தனர்.
அவர்களின் டிக்கெட்டை ஸ்கேன் செய்த ஊழியர்களுக்கு அவை போலி டிக்கெட் என்று தெரிய வந்தது.
இது தொடர்பாக தேவஸ்தான ஊழியர்கள், ஊழல் கண்காணிப்பு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து பக்தர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பிரசாத் என்ற இடைத்தரகர் இந்த டிக்கெட்டுகளை ரூ.4 ஆயிரத்துக்கு விற்றது தெரிய வந்தது.
அந்த டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த ஊழல் கண்காணிப்பு போலீஸார் இந்த வழக்கை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இடைத்தரகர் பிரசாத்தை தேடி வருகின்றனர்.