வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு தகுதியுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கால்நடை பராமரிப்புத் துறையின் வேலூர் மாவட்ட அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 67 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 10 வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் வயது அதிகபட்சம் அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினராக இருந்தால் 35 வயதும், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) ஆகியோருக்கு 32 வயதும், பொதுப்பிரிவினருக்கு 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி வயது தளர்வு அளிக்கப்படும்.
இப்பணிக்கு பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோரின் இட ஒதுக்கீடு, விகிதாச்சார அடிப்படையில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தகுதியுடையோர் விண்ணப்பங்களை www.vellore.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, வேலூர் - 632 004 என்ற முகவரியில் வரும் 22-ஆம் தேதி மாலைக்குள் சேர்க்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் நடைபெறும்.