ஆற்காடு அருகே தனியார் பள்ளியில் ஜன்னல் கம்பிகளை உடைத்து ரூ. 4.50 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரியில் தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை வழக்கம் போல, ஊழியர்கள் பள்ளியை திறந்தனர். முதல்வர் அறையை திறந்த போது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு அங்கிருந்த அலுவலகக் கோப்புகள் தரையில் சிதறிக் கிடந்தது தெரியவந்தது.
தகவலின் பேரில் அங்கு வந்த ரத்தினகிரி போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், முதல்வர் அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 4.50 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வேலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.