திருப்பத்தூர் அருகே வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பத்தூரை அடுத்த கொரட்டி அருகே பஞ்சனம்பட்டியில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் (45) என்பவருக்குச் சொந்தமான வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 8 மணியளவில் நிறுவனத்தில் பணிபுரியும் அதே பகுதியைச் சேர்ந்த ருத்ரா (35) மின் சுவிட்சை இயக்கியபோது, திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. இதில், பலத்த காயமடைந்த அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க முயன்றனர்.
அதற்குள் கட்டடம் முழுவதும் தீ பரவியது. இதையடுத்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.