வாணியம்பாடி அருகே விபத்து: பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது: 23 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் மாங்காய் லோடு ஏற்றி வந்த மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் மாங்காய் லோடு ஏற்றி வந்த மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பெண்கள், 2 பள்ளி மாணவர்கள் உள்பட இறந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்கள் அனைவரும் கல்நார்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. 
ஆந்திர மாநிலம் கங்குந்தி ஊராட்சி நாயனூர் பகுதியில் உள்ள மாங்காய்த் தோப்புகளை வாணியம்பாடியை அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரவிந்தன், சிலம்பரசன், உமாபதி ஆகிய 3 பேரும் குத்தகைக்கு எடுத்துள்ளனர். இதனையடுத்து மாங்காய் அறுத்துக் கொண்டு வருவதற்காக நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 11 பெண்கள், பள்ளி விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட 28 பேரும், குத்தகைதாரர்கள் அரவிந்தன், சிலம்பரசன், உமாபதி ஆகிய 3 பேரும், அதே பகுதியைச் சேர்ந்த மினிலாரி ஓட்டுநர் கண்ணையன்(58) உள்பட32 பேரும் சனிக்கிழமை காலை மினி லாரியில் புறப்பட்டனர். மாங்காய்களை அறுத்து விட்டு இரவு 7  மணியளவில் மினி லாரியில் ஏற்றிக் கொண்டு மாங்காய்க்கு மேல் 28 பேரும், ஓட்டுநருக்கு பக்கத்தில் 3 பேரும் அமர்ந்து கொண்டு வந்தனர். 
இரவு 8 மணியளவில் கங்குந்தி வனப்பகுதியில் ஆந்திர மாநிலம், குப்பம் மண்டலம் பெத்தவங்கா தாலுகா பெரும்பள்ளம் அருகே வேகமாக வந்த மினி லாரி அங்குள்ள வளைவு ஒன்றில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அது, சாலையோரம் இருந்த 50 அடி பள்ளத்தில் உருண்டு சென்று கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மினி லாரி நொறுங்கியது. மாங்காய்களின் மீது அமர்ந்து வந்தவர்களும் பள்ளத்தில் விழுந்தனர். இதில் நிகழ்விடத்திலேயே லாரியின் அடியிலும், பள்ளத்தில் விழுந்தும் கல்நார்சம்பட்டியை சேர்ந்த செண்பகம்(40),  புனிதா(32), மீனாட்சி (40), சென்றாயன் (23), கமலா(30)  மற்றும் உமாபதி (30) ஆகிய 6 பேர் இறந்தனர். மற்றவர்கள் படுகாயமடைந்து அலறிக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் தங்களது செல்லிடப்பேசி மூலம் உறவினர்களுக்கு இவ்விபத்து குறித்து எடுத்துக் கூறியுள்ளனர். 
இதனையடுத்து, தகவலறிந்த ஆந்திர மாநிலம் குப்பம் போலீஸார், தமிழகத்தின் திம்மாம்பேட்டை போலீஸார்  மற்றும் சுற்றியுள்ள கிராம  மக்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் தமிழக -ஆந்திர போலீஸார் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. பள்ளத்தில் இருந்தவர்களை மீட்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
சம்பவ இடத்தில் இறந்த 6 பேரின் உடல்களையும் குப்பம் போலீஸார் மீட்டு குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் படுகாயமடைந்து அனுமதிக்கப்பட்ட மாணவன் துளசி(16), படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது வழியில் மற்றொரு மாணவன் முத்து(15) ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். 
இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாராயணன்(18) ஞாயிற்றுக்கிழமை காலை இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது. 
படுகாயமடைந்த அச்சுதன் (38), சக்திவேல் (32), செந்தமிழ் (32), பிரசாந்தி (17), கவுரம்மாள் (34), திருவிக்ரம் (19), திலீபன்(19), மோகன் (27), பூவரசன் (25), அரவிந்தன் (25) ஆகிய 10 பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலும், லாரி ஓட்டுநர் கண்ணையன் (58), சங்கர் (45), கலைவாணி (32), ராஜா (65), சக்திவேல் (31) கோவிந்தம்மாள் (17), ராம்குமார் (30), சசிகலா (18), ரவி (40), முத்தம்மா (35), சதீஷ் (27), சிலம்பரசன் (20) அம்பிகா (38) ஆகிய 13 பேரும் வேலூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
விபத்து குறித்து கல்நார்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   
விபத்து குறித்து தகவலறிந்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா, மாவட்ட எஸ்,பி, ராஜசேகரபாபு, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட எஸ்.பி. பகலவன் ஆகியோர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை இரவு நேரில் சென்றனர். அங்கு, காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களிடம் அவர்கள் நலம் விசாரித்தனர். தகவலறிந்த அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபீல் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். காயமடைந்தவர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்து, ஆறுதல் கூறினர். பின்னர் அமைச்சர் வீரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "விபத்தில் இறந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்திருப்பவர்கள் குறித்து தமிழக முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கும், படுகாயமடைந்த கூலித் தொழிலாளர்களுக்கும் அரசு சார்பில் இழப்பீடு வழங்க  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார். 
இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சக்திவேல் கூறியது:
நாங்கள் அனைவரும் கல்நார்சம்பட்டியைச் சேர்ந்தவர்கள். வழக்கமாக மாங்காய் அறுத்துக் கொண்டு ஒரு லாரியில் மாங்காய் கொண்டுவருவோம். மற்றொரு லாரியில் நாங்கள் வருவோம். நேற்று முன்தினம் மற்றொரு லாரி வராததால் ஒரே லாரியில் 6 டன் மாங்காய்களை ஏற்றிக் கொண்டு அவற்றின் மீது 28 பேரும், ஓட்டுநர் இருக்கையில் 3 பேரும் அமர்ந்து வந்தோம். இதனால் எடை தாங்காமல் பயணித்த மினி லாரி, ஒரு வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் உருண்டது. இதனால்தான் விபத்து ஏற்பட்டது என்றார் அவர். 
9 பேரின் உடல்கள் அடக்கம்: குப்பம்  அரசு மருத்துவமனையில் இருந்த 6 பேரின் உடல்களும், வாணியம்பாடி மற்றும் வேலூர் அரசு மருத்துவனையில் இருந்த 3 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் பின், 9 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன. 
இறந்தவர்கள் தனது தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அமைச்சர் வீரமணி ஞாயிற்றுக்கிழமை காலை குப்பம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். இறந்தவரின் உடல்களைப் பார்த்த பின், துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக பிரேதப் பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்தாதர். அதன் பின் அந்த கிராமத்திற்கு இறந்தவர்களின் உடல்களைக் கொண்டுவரச் செய்தார். இறுதிச்சடங்கு நடைபெறும் வரை அவர் அங்கு தங்கியிருந்ததோடு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com