குடியாத்தம் அருகே அண்ணன் இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் தம்பி மாரடைப்பால் உயிரிழந்தார்.
குடியாத்தம், சுண்ணாம்பு பேட்டையைச் சேர்ந்த மறைந்த பெருமாள் நாயுடுவின் மகன்கள் பி. வரதராஜ் (60), பி. ரவி(52). இருவரும் தனித்தனியாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வரதராஜ் அவரது வீட்டில் உயிரிழந்தார். அப்போது ரவி மாதனூர் அருகே கார் ஓட்டிச் சென்று கொண்டிருந்தாராம்.
வரதராஜ் இறந்த செய்தியை அவரது உறவினர்கள் செல்லிடப்பேசி மூலம் ரவிக்கு தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவி மயக்கமடைந்துள்ளார். காரில் இருந்தவர்கள் அவரை மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ரவி மாரடைப்பால் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இருவரது சடலங்களும் திங்கள்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.