வாணியம்பாடி, ஆம்பூர் அருகே நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழந்தனர்.
ஆம்பூர் - விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே திங்கள்கிழமை சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல்
கிடைத்தது.
அதன்பேரில், நிகழ்விடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸார், சடலத்தை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் மாநிறம் கொண்டவராகவும், வெள்ளை நிற சட்டையும், நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்தார். இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இதேபோல், ஆம்பூர் ரயில் நிலையம் அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஆழப்புழாவிலிருந்து நாக்பூர் செல்லும் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், சடலத்தை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரிடம் சோதனையிட்டதில் அவரது பாக்கெட்டில் ஆலப்புழாவிலிருந்து நாக்பூர் வரை டிக்கெட் எடுத்துள்ளார். இதனால் இவர் படிக்கெட்டில் பயணம் செய்தபோது, தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவர் மாநிறம் கொண்டவராகவும், கருப்பு நிறத்தில் மஞ்சள் நிற காலர் வைத்த டி சர்ட்டும், நீல நிறத்தில் சார்ட்ஸ்சும் அணிந்திருந்தார். இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. உயிரிழந்த இருவர் குறித்தும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.