காதல் திருமணம் செய்த இளம்பெண் 3 மாதங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது கணவர் குடும்பத்தினரிடம் வருவாய் கோட்டாட்சியர் புதன்கிழமை விசாரணை நடத்தினார்.
காட்பாடி அருகே மெட்டுக்குளம் காலனி முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரம்யாவும் (19). லத்தேரி அருகே உள்ள செஞ்சி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த அஜீத்குமாரும் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இருவரும் அஜீத்குமார் வீட்டில் வசித்து வந்த நிலையில், ரம்யா கடந்த 12-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக பனமடங்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனிடையே, ரம்யாவின் சாவில் மர்மம் உள்ளதாகக் கூறி அவரது பெற்றோர் காவல் நிலையத்தையும், பிறகு சடலத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். பின்னர், பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து ரம்யாவின் கணவர் அஜீத்குமார், அவரது பெற்றோரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் கணவர், குடும்பத்தினரிடம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் புதன்கிழமை விசாரணை நடத்தினார்.