வாலாஜாபேட்டை அருகே மினி வேனில் கடத்தி வரப்பட்ட 875 லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு சிறப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள வாணிச்சத்திரம் பகுதியில் வேலூர் மாவட்ட மதுவிலக்கு சிறப்புப் பிரிவு போலீஸார் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்விழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 25 கேன்களில் சுமார் 875 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து எரிசாராயத்துடன் மினி வேனை பறிமுதல் செய்தனர். பின்னர் எரிசாராயம் கடத்தி வந்த விஷாரம் பகுதியைச் சேர்ந்த விஜயன் (எ) விஜயக்குமாரை (48) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட விஜயகுமார் ஏற்கெனவே எரிசாராயம் கடத்தல் வழக்கில் சிறைக்குச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.