ஜோலார்பேட்டை அருகே ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
கர்நாடக மாநிலம்,பெங்களூரு ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி குமுதா. இவர்கள் தங்களது குழந்தையுடன் செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்தனர்.
ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டையில் சிக்னலுக்காக ரயில் நின்றபோது, மர்ம நபர் ஒருவர் திடீரென குமுதாவிடம் இருந்த பையை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து இறங்கி ஓடினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமுதா கூச்சலிட்டார். சக பயணிகள் மர்ம நபரைப் பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த நபர் தப்பியோடினார். பறித்துச் சென்ற பையில் 2 கிராம் தங்க நகை, ரூ.14 ஆயிரம்,செல்லிடப்பேசி ஆகியன இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.