ஜோலார்பேட்டையில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டையில் உள்ள ஓட்டல் தெருவில் ஞாயிற்றுக்கிழமை 3 பெண்கள் அப்பகுதியில் உள்ள சில பெண்களிடம் கவரிங் நகையைக் கொடுத்தால் தங்க நகையாக மாற்றி தருவதாகவும், அதற்கு கணிசமான ஒரு தொகையை தந்தால்போதும் எனக் கூறியுள்ளனர். அப்போது, அங்கு ஜோலார்பேட்டை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போலீஸாரை கண்டதும் அப்பெண்கள் அங்கிருந்து செல்ல முயன்றனர். இதைப் பார்த்த போலீஸார் அவர்கள் 3 பேரையும் பிடித்து, விசாரணை செய்ததில், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் சேலம் பகுதியைச் சேர்ந்த சங்கரி (38), ருக்கு (38), தனலட்சுமி (35) என்பதும், இவர்கள், பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பணம் பெற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பத்தூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.