வேலூரில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பார்வையிழந்த மாணவருக்கு பள்ளி நிர்வாகம் ரூ. 9 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது.
வேலூர் பாகாயத்தில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற்ற சாந்திநிகேதன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலத்த காயமடைந்த சைதாபேட்டை கே.வி.செட்டி தெருவைச் சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் நவீனின் (17) பார்வை பறிபோனதுடன் உடல்நிலையும் மோசமானது.
அவரது சிகிச்சைக்கு உதவிட பல்வேறு தரப்பினரும் நிதியுதவி செய்துள்ளனர்.
இதனிடையே, காயமடைந்த மாணவர் நவீனுக்கு மருத்துவ சிகிச்சை செலவாக ரூ. 4.50 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக பள்ளித் தலைவர் ஏ.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். மேலும், வேலூர் வருவாய் கோட்டாட்சியர், திருவண்ணாமலை மெட்ரிக். பள்ளிகளின் ஆய்வாளர், வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் முன்னிலையில் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 9 லட்சத்துக்கான காசோலையை மாணவரின் தந்தை சிவலிங்கத்திடம் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.