ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவர்கள் செல்ல சாலை அமைத்து தரக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் அருகே மாக்கனூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், வேடியப்பன் கோயில் வட்டத்தில் இருந்து சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள்
படிக்கின்றனர்.
இந்நிலையில், வேடியப்பன் கோயில் பகுதியிலிருந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் பள்ளியின் அருகே உள்ள தனி நபரின் நிலத்தை கடந்து செல்ல வேண்டும். இந்தப் பாதையை மாணவர்களும் பொதுமக்களும் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த இடத்தில் அந்த நபர் விவசாயம் செய்வதாகக் கூறி பாதையை அடைத்துள்ளார். இதனால் மாணவர்கள் சுமார் 3 கி.மீ. வரை சுற்றி, பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் பெற்றோர் கடந்த இரு வாரங்களுக்கு முன் பள்ளிக்குச் சென்று மாற்று சான்றிதழ் கேட்டுள்ளனர். தலைமை ஆசிரியர் சன்மதி அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். இந்நிலையில் தங்களுக்கு சாலை அமைத்து தரக் கோரி வேடியப்பன் கோயில் வட்டத்திலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை பள்ளியின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.