ஆன்லைன் கலந்தாய்வு மூலம் தருமபுரியில் 16 தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், உயர், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இணையதளம் மூலம் பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு சனிக்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் நாளில் (ஆக.6) மாவட்டத்திற்குள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 31 பேரும், வெளி மாவட்டத்திற்கு 3 பேரும் விண்ணப்பித்து கலந்து கொண்டனர்.
இதில் பாலக்கோடு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தெரிசால், தருமபுரி ஒளவையார் பள்ளிக்கும், நல்லம்பள்ளி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்முடி, இலக்கியம்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு என 14 பேருக்கு மாவட்டத்திற்குள் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
இதேபோல, வெளி மாவட்டத்திற்கு 2 தலைமை ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
இணையதளம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கான பணியிட மாறுதல் ஆணையினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்(பொ) பாலாஜி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி, பள்ளி துணை ஆய்வாளர் சீனிவாசன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல, தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிச்சாமி தலைமையில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்றது.
கலந்தாய்வில் 19 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை, 9 பேருக்கு தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு, 36 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.