சூளகிரியில் வெள்ளிக்கிழமை இரவு வீதிவீதியாகச் சென்ற 4 யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அலகுபாவி கிராமத்தில் கடந்த இரு தினங்களாக 4 யானைகள் முகாமிட்டிருந்தன. பகல் நேரங்களில் வனப் பகுதியில் இருந்த இந்த யானைகள், இரவு நேரங்களில் வாழை, மாமரங்கள், நெல், ராகி உள்ளிட்ட விவசாயப் பயிர்களை உண்டும், கால்களால் சேதப்படுத்தியும் வந்தன.
இந்நிலையில், சூளகிரி பவர் கிரிட் அருகே ஒமுதேப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட சுமார் ஒரு மணி நேரம் ஆனந்தக் குளியலிட்டன. பிறகு சூளகிரி பெட்ரோல் நிலையத்துக்கு அருகில் வந்ததால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஓட்டிச் சென்றனர்.
சூளகிரி கோல்டன் சிட்டி லேஅவுட்டுக்குள் நுழைய முயன்ற 4 யானைகள், சூளகரி காவல் நிலைய வளாகத்துக்குள் புகுந்தன. பின்னர் காவல் நிலைய சுற்றுச்சுவர் பின்புறம் வழியாக தபால் அலுவலகம், வாணியர் வீதி வழியாக நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றன.
இதனால் சூளகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என வனத் துறையினர் ஓலிபெருக்கி முலம் எச்சரித்து வருகின்றனர்.