போச்சம்பள்ளி அருகே இளைஞரின் இருசக்கர வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போச்சம்பள்ளியை அடுத்த சந்தூர் அருகேயுள்ள ஐயர் பள்ளம் என்னுமிடத்தில், ஆனந்தூர் அருகேயுள்ள தோழம்பதி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சரவணன் (37) தனது அண்ணனின் இருசக்கர வாகனத்தில் சித்தப்பாவுடன் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள வேலம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த மர்மநபர், இவரது வாகனத்தின் மீது மோதியுள்ளார், இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபர், அவரைத் தாக்கி அவரது இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ள சரவணன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.