பர்கூர் கூட்டுறவு ஐடிஐ-இல் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஆக.22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சுப்பிரமணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய தொழிற்சான்றிதழ் படிப்புக்கான ஓராண்டு கால தொழிற்பிரிவுகளான கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டெண்ட், உணவு பதப்படுத்துதல், ஆடை தயாரித்தல் ஆகிய பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும், தையற்கலை தொழில்நுட்பப் பிரிவுக்கு மட்டும் 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்பப் பிரிவுகளில் சேர்ந்து தேர்ச்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. வேலைதேடும் இளைஞர்கள், பெண்கள், தனியாக தொழில் தொடங்க காத்திருப்பவர்களும் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். இதில் ஆண்களுக்கு 14 முதல் 40 வயது நிறைந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. தகுதியானவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத் தரப்படும். மேலும், அரசுப் பேருந்தில் 50 சதவீத கட்டணச் சலுகை பெற்றுத் தரப்படும். எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.