வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவேரிப்பட்டணம் காவல் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த பெண்ணேஸ்வரமடம் அருகே உள்ள நல்லான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (37), தையல் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான ஜெயந்தி என்பவருக்கும் நிலத் தகராறு இருந்து வந்ததாம்.
இந்நிலையில், கடந்த நவ.19-இல் இருவருக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டதில், 2 பேரும் காவேரிபட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். அவர்கள் 2 பேரும் கொடுத்த புகாரின் பேரில், அவர்களை விசாரணைக்காக காவேரிப்பட்டணம் போலீஸார் அழைத்தனர். அப்போது, அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார், பெண்ணைத் தாக்கியுள்ளதாகவும், எனவே, வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக சங்கரிடம் கேட்டாராம். தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது எனக் கூறிய சங்கர், முதல் தவணையாக ரூ.10 ஆயிரமும், பின்னர் ரூ.10 ஆயிரமும் தருவதாகக் கூறினாராம். ஆனாலும், லஞ்சப் பணத்தை கொடுக்க விரும்பாத சங்கர் அதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜா, ஆய்வாளர் முருகன், போலீஸார் முருகன், பஞ்சாட்சரம், முத்துராஜன், விஜயகுமார், பிரபாகரன், ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர், சங்கரிடம் ரசாயனப் பொடி தடவிய ரூ.10 ஆயிரம் கொடுத்து காவல் ஆய்வாளரிடம் கொடுக்குமாறு கூறினர்.
அதன்படி, வியாழக்கிழமை காவல் உதவி ஆய்வாளரை தொடர்புகொண்ட சங்கரிடம், அவர் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள டீக்கடைக்கு வருமாறு கூறினாராம். அதன்படி, அங்கு சென்ற சங்கரிடம், ரமேஷ்குமார் ரூ.10 ஆயிரம் வாங்கியுள்ளார்.
இதையடுத்து, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரமேஷ்குமாரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒசூர் கிளை சிறையில் அடைத்தனர்.