கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகு சேதமடைந்ததையடுத்து, கிருஷ்ணகிரி அணையின் உதவி செயற்பொறியாளர் உள்பட இரு பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையை பொதுப்பணித் துறையினர் பராமரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி அணையின் முழுக் கொள்ளளவான 52 அடியை எட்டி 100 நாள்கள் கடந்த நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி அணையின் பிரதான மதகுகளில் முதல் எண் கொண்ட மதகு சேதமடைந்தது. இதையடுத்து அணையிலிருந்து மற்ற மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில், மதகு சேதமடைந்ததற்கு காரணமான அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திமுக, பாமக, விவசாயிகள் சங்கம் உள்ளிட்டோர் போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி அணையின் உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி பொறியாளர் கார்த்திகேயன் ஆகிய இருவரையும் பொதுப்பணித் துறையின் கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள்
உறுதிப்படுத்தின.
மேலும், கிருஷ்ணகிரி அணையை கெலவரப்பள்ளி அணையின் உதவி செயற்பொறியாளர் குமார் கூடுதலாக கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பொதுப்பணித் துறையின் அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அந்தத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.