ஒசூர் வனக்கோட்டம் தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் வட்டவடிவ பாறை அருகே முகாமிட்டுள்ள 60 யானைகளை விரட்ட வனத்துறையினர் 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் கர்நாடக மாநிலம், பன்னர்கட்டா வனப்பகுதியிலிருந்து 60 யானைகள், தளி, ஜவளகிரி வழியாக ஒசூர் சானமாவு காட்டுக்குள் வந்தன. இந்த யானைகள் காமன்தொட்டி, ஆளியாலம், போடூர்பள்ளம், உத்தனப்பள்ளி, தொரப்பள்ளி ஆகிய கிராமங்களில் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தின.
இதனைத் தொடர்ந்து யானைகள் கூட்டத்தை, தேன்கனிக்கோட்டை வனப் பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர். இந்த யானைகள், கடந்த ஒரு வாரமாக வட்டவடிவ பாறை அருகே முகாமிட்டுள்ளன. இந்த யானைகளை மீண்டும் கர்நாடக மாநிலத்துக்கு விரட்டும் பணிக்கு தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் 50 பேர் கொண்ட வனத் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.