மாம்பழக் கூழ் தொழிற்சாலையில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
பர்கூர் அருகே, தனியார் மாம்பழக் கூழ் உற்பத்தி தொழிற்சாலையில் பராமரிப்புப் பணியின் போது தவறி விழுந்ததில் வட மாநிலத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
பர்கூர் அருகே உள்ள தண்ணீர்பள்ளம் பகுதியில் தனியார் மாம்பழக் கூழ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள காஞ்ஜா கிராமத்தைச் சேர்ந்த நிஜாம் அலி, ரோஹித் கான் ஆகியோர் கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களைப் பராமரிக்கும் பணியில் ரோஹித்கான் (24) திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது அவர், தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து ரோஹித் கானின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.