சூளகிரி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்தார்.
போச்சம்பள்ளியை அடுத்த பெரியகரடியூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் ஒசூரில் உள்ள தனியார் வங்கியில் விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னார் அருகே இருசக்கர வாகனத்தில் கார்த்திக் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.