போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை திட்ட செயல் விளக்கப் பயிற்சி முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்கள் உயிரையும், உடமைகளையும் காத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டியது குறித்த செயல் விளக்கப் பயிற்சியை தீயணைப்புத் துறை வீரர்கள் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் செய்துகாட்டினர். இதில், வெள்ளம், அடுக்குமாடி கட்டடங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் சிக்கியவர்கள், நில அதிர்வுகளில் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை கயிறு வழியாகவும், ஏணி வழியாகவும் மீட்பது, பிளாஸ்டிக் பாட்டில்கள், வாழை மரம், சாக்கு, வாட்டர் கேன், லைப் ஜாக்கெட் ஆகியவற்றை பயன்படுத்தி மீட்பது என 15 வகையான மீட்பு நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர்.
போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் திராவிடமணி தலைமையில் ராமமூர்த்தி, வசந்த், கபிலன், உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தனர். இதில் ஊத்தங்கரை பொறுப்பு முன்னணி தீயணைப்பு அலுவலர் ஆறுமுகம் பங்கேற்று இந்தப் பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கினார். வட்டாட்சியர் பண்டரிநாதன், தனி வட்டாட்சியர் சமூகப் பாதுகாப்புத் திட்டம் மிருணாளினி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மகேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் திருமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் சக்தி, பாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் லெனின், சர்வேந்தன் மற்றும் அலுவலக உதவியாளர்கள், பொதுமக்கள் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.