தேன்கனிக்கோட்டை அருகே வனப் பகுதியையொட்டியுள்ள தோட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த கரடிகளால் விளை பயிர்களுக்கு காவல் இருந்த விவசாயிகள் அலறியடித்து தப்பியோடினர்.
இதுவரை யானைகள், காட்டுப் பன்றிகள் மட்டுமே அவ்வப்போது சுற்றித் திரிந்த வனப் பகுதியையொட்டி உள்ள தோட்டங்களில், தற்போது கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இரவு நேரங்களில் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை சாப்ராங்கனப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீமதிக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தில் யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் அடிக்கடி வருவதால் சீனிவாசன் விளை பயிர்களைப் பாதுகாக்க இரவு நேரத்தில் தோட்டத்தில் காவலிருந்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தோட்டத்துக்குள் புகுந்து சீனிவாசனை நோக்கி வந்த கரடியை கண்டு, அலறியடித்து கொண்டு தப்பியோடிய சீனிவாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதேபோல பஞ்சப்பள்ளியில் தோட்டத்தில் காவலிருந்த அப் பகுதியைச் சேர்ந்த முருகனையும் கரடி துரத்தியது. தப்பியோடிய முருகன் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் குறித்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம், வனக் காப்பாளர் முனிராஜ் ஆகியோர் கரடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.