போச்சம்பள்ளியில் அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்லும் சித்த மருத்துவப் பிரிவு கடந்த மூன்று மாதங்களாக முறையாக செயல்படுவதில்லை. மேலும், தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனையில் சித்த மருத்துவர் மட்டுமே உள்ளார். சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மருத்துவரே மருத்துவம் பார்த்து பிறகு அவரே மருந்துகளும் கொடுக்கவேண்டிய நிலை உள்ளது.
மேலும், இங்கு நிலவேம்பு கசாயம் 3 மாதங்களுக்கு மேலாக பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. இங்கு நிரந்தர மருந்து ஆளுநர் மற்றும் மருத்துவமனை பணியாளர் இல்லாமல் நோயாளிகள் அவதியுறுகின்றனர். எனவே, சித்த மருத்துவ சிறப்புப் பிரிவை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, நிரந்தர சித்த மருத்துவ மருந்தாளுநர் மற்றும் மருத்துவமனை பணியாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.