10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 93.12 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 30-ஆம் தேதி நிறைவு பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 376 பள்ளிகளைச் சேர்ந்த 12,915 மாணவர்கள் உள்பட மொத்தம் 23,375 பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்தத் தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியாயின.
அதன்படி, தேர்வு எழுதிய 11,851 மாணவர்கள், 11,779 மாணவியர் என மொத்தம் 23,630 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 93.12 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.93 சதவீதம் குறைவாகும். 2016-17-ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் 91.76 சதவீதமும், மாணவியர் 94.53 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 376 பள்ளிகளில் 153 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகள் 259-இல், 70 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் 25-ஆவது இடத்தை பெற்றுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொழிப் பாடத்தில் 95.96 சதவீதமும், ஆங்கிலம்-97.76, கணிதம்-95.74, அறிவியல்-99.35, சமூக அறிவியல்-98.49 சதவீதமும் பெற்றுள்ளனர். கணிதத்தில்-589 மாணவர்களும், அறிவியல்-617, சமூக அறிவியல்-2,420 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.