வாடமங்கலம் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியதால், 10 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் சேதமடைந்தன.
போச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. வாடமங்கலம் ஏரிநீரை ஆதாரமாக கொண்டு நெற்பயிற்கள் பயிர் செய்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக பெரும்பாலான ஏரிகள் நிரம்பின.
அந்த வகையில், வாடமங்கலம் ஏரி நிரம்பியதால், தண்ணீர் செல்லும் கால்வாய்கள் சீர் படுத்தாததால் நெற்பயிர்களில் பாய்ந்தன. இதில் சுமார் 10 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி சேதமடைந்தன.
இதுகுறித்து வாடமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி காசி கூறியது, சுமார் 20 விவசாயிகளின் வயல்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சுமார் 10 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டன. இதனால் சுமார் 30,000 கிலோ நெல் வீணாகியுள்ளன. மேலும், இதுவரை எந்த அதிகாரியும் பாதிப்பு குறித்து பார்வையிட வரவில்லை எனவும், உடனடியாக நேரில் வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.