சசிகலாவின் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வருமான வரித் துறை சோதனையை அதிமுக தொண்டர்கள் வரவேற்கின்றனர் என முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் -இபிஎஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண் சிகிச்சை முகாமைத் தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டதில் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்பு இல்லை. சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான 60 போலி நிறுவனங்களில் பல ஆயிரம் ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களின் அடிப்படையிலே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சட்டம் தனது கடமையைச் செய்கிறது.
ஜெயலலிதாவுக்கு உதவி செய்ய வந்த சசிகலா, அவரை ஏமாற்றி, நல்லவர் போல் நடித்து ஆட்சியில் அதிகாரத்தைச் செலுத்தி சொத்துகளைச் சேர்த்தார். சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த விவேக், பல கோடி ரூபாய் மதிப்பிலான பீனிக்ஸ் மாலை எப்படி வாங்கினார்?
அதிமுகவின் உண்மை விசுவாசிகளை செயல்படாமல் முடக்கியவர் சசிகலா. 1996 -ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொண்டபோது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால், தற்போது சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதை அதிமுக தொண்டர்கள் வரவேற்கின்றனர்.
ஒரு கட்சியின் தலைமைக்கு இரண்டு தலைவர்கள் இருந்தால் விமர்சனங்கள் வரும் என்பதால், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் இரட்டை குழல் துப்பாக்கி போல் பொறுப்புடன் செயல்படுகின்றனர். நாங்கள்தான் உண்மையான அதிமுக. தினகரன் அணியில் இருக்கும் நண்பர்கள் எங்கள் அணிக்கு வரவேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் அதிமுகவின் இரு கண்கள். இந்த கண்களை பேணி காப்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனின் கடமை என்றார் அவர்.