கிருஷ்ணகிரி அருகேயுள்ள பெரிய ஏரி, 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதை அடுத்து, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை தெப்பம் விட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் கடும் வறட்சியால் ஏரிகள் வறண்டு காணப்பட்டன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், அணைகள் நிரம்பின. இந்த நிலையில், கிருஷ்ணகிரி அருகேயுள்ள பெரிய ஏரிக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் நீர் வந்தது. மார்கண்டையன் நதியிலிருந்து பெரிய ஏரிக்கு நீர் வந்ததையடுத்து பெரிய ஏரி ஞாயிற்றுக்கிழமை நிரம்பியது.
இதையடுத்து பர்கூர் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ளஏரிகளுக்கு நீரை கொண்டு செல்லும் வகையில் பெரிய ஏரியிலிருந்து பாசனக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும், பாசனக் கால்வாயில் உள்ள அடைப்புகளை சுத்தம் செய்யும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பெரிய ஏரி, 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதையடுத்து, பூசாரிப்பட்டி மற்றும் பெரிய ஏரியை சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள் சிறப்பு பூஜைகள் செய்து, ஏரி நீரில் தெப்பம் விட்டு மகிழ்ந்தனர். தெப்பம் விடுவதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.